அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இராஜதந்திரப் போருக்குத் தயாராகிறது இலங்கை - இதயச்சந்திரன்

Go down

இராஜதந்திரப் போருக்குத் தயாராகிறது இலங்கை - இதயச்சந்திரன்  Empty இராஜதந்திரப் போருக்குத் தயாராகிறது இலங்கை - இதயச்சந்திரன்

Post by VeNgAi Sun May 01, 2011 7:48 pm

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் செயலாளர் ரமேஷ் என்றழைக்கப்படும் அன்னலிங்கம் உதயகுமார் இனந்தெரியாதோரால் பலமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
கவனிக்கப்பட வேண்டிய உடனடி சிறப்பு நடவடிக்கை ஒன்று ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த பரிந்துரையில் முதலாவதாக குறிப்பிடப்பட்ட ""அரச மற்றும் இணை இராணுவக் குழுக்களின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்'' என்கிற வேண்டுகோளிற்கு கிடைத்த முதல் எதிர்வினையாக இதனைப் பார்க்கலாம்.

அதாவது அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "தி வோல் ஸ்ரீட் ஜேர்னல்' என்ற பத்திரிகையும் இவ்வாறான நிலைமைகள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கிறது.

இலங்கை அரசின் மீது யுத்தக் குற்றங்களைச் சுமத்துவதால் அந்நாட்டின் ஆட்சியாளர்கள், கடும் போக்கினை மேற்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டு விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடுவார்கள் என்று எச்சரிக்கிறது அப்பத்திரிகை.

அதாவது மேற்குலகத்திற்கு எதிரான இறுக்கமான நிலைப்பாட்டினை இலங்கை மேற்கொள்வதனைத் தடுக்கும் வகையில் அரசியல் தீர்வொன்றிற்கான அழுத்தங்களைக் கொடுப்பதே பொருத்தமானதென அது கருதுகின்றது.

அதேவேளை எந்தவிதமான கருத்துக்களையும் வெளிப்படுத்தாமல் நிபுணர் குழுவில் அறிக்கையினை ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்தியா, அமெரிக்கப் பத்திரிகையின் நிலைப்பாட்டினை வலியுறுத்தும் சாத்தியப்பாடுகள் உண்டு.

அறிக்கையினை இந்தியா படித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தமது உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்றினை இந்தியாவிற்கு அனுப்ப இலங்கை அரசு முயற்சிக்கிறது.
அத்தோடு சர்வதேச ஆதரவினைத் திரட்டுவதற்கு வெளிநாட்டுத் தூதுவர்களை சந்திக்கிறார் ஜீ.எல். பீரிஸ்.

இவை தவிர கையெழுத்து வேட்டையோடு மேதின ஊர்வலங்கள் ஊடாக நிபுணர் குழுவின் அறிக்கையை அடியோடு நிராகரிப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருவதனைக் காணலாம்.
அதேவேளை, சமாந்தரமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதாக அரசு முனைப்புக் காட்டுகிறது.

ஆனாலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போரõளிகள் மற்றும் பொது மக்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவதாகக் கூறி மூன்றாவது தடவையாகவும் அரசு தம்மை ஏமாற்றி விட்டதாக சுமந்திரன் எம்.பி. ஆதங்கப்படுகிறார்.

இருப்பினும் நாடு தழுவிய ரீதியில் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கிய நிபுணர் குழு அறிக்கைச் சூறாவளி, பேரினவாத சிந்தனைத் தளத்தினை பலமடையச் செய்துள்ளது என்று கருத இடமுண்டு.

கடந்த 27 ஆம் திகதி வெளிநாட்டமைச்சு வெளியிட்ட அறிக்கை, சிங்களப் பேரினவாதத்தின் அடிபணியா அரசியலை, மிகத் துல்லியமாக உணர்த்துகிறது.

தருஸ்மான் அறிக்கை' என்று குறிப்பிடப்படும் நிபுணர் குழுவின் அறிக்கை, பக்கச்சார்பான தரவுகளைக் கொண்டதாகவும் தம்மால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவானது (ஃஃகீஇ), விரும்பினால் நிபுணர் குழு அறிக்கையிலுள்ள உள்ளடக்கம் குறித்தான மதிப்பீடுகளை மேற்கொள்ளுமென அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆனாலும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து குறிப்பிடும் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை, அனைத்துலக தரமற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்காத குழு இதுவென்று அதனை அடியோடு நிராகரிக்கின்றது.

அதற்கு மாற்றீடாக தாம் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல்கள், மனிதத்திற்கெதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கை அரசானது நீதியான அனைத்துலக மரபு சார்ந்த சட்டங்களுக்கு உட்பட விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென வலியுறுத்தும் அதேவேளை, அத்தகைய விசாரணைகளை அவதானிப்பதற்கு சுயாதீன அனைத்துலக கண்காணிப்புக் குழுவொன்றினை ஐ.நா. செயலாளர் நாயகம் அமைக்க வேண்டுமென அவ்வறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

இந்த அறிக்கைக்கு ஆதரவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு, கனேடிய லிபரல் கட்சி மற்றும் அமெரிக்கா போன்றவை கருத்து வெளியிட்டுள்ளன.

முக்கியமாக சர்வதேச விசõரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்கிற வகையில் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தலைமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் அடுத்த கட்ட நடவடிக்கையை தன்னால் மேற்கெள்ள முடியாதென தனக்குள்ள அதிகார வரையறை குறித்து கருத்துக் கூறும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் பாதுகாப்புச் சபையிலுள்ள உறுப்பினர்களுடன் இது குறித்த உரையாடல்களை நிகழ்த்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சூடான் போன்று ஒருநிலைமை இங்கு ஏற்படப் போவதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனாலும் சூடானை ஒத்த நிகழ்வுகள் இலங்கை விவகாரத்தில் உருவாவது போல் தோன்றினாலும் புவிசார் அரசியல் கள நிலைமைகள், இங்கு முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுவதை அவதானிக்க வேண்டும்.

நவம்பர் 2009 இல் சூடானில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் போர்க் குற்றங்கள் குறித்தான ஐ.நா. வின் நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதனை ஐ.நா. சபைக்கான சூடானிய வதிவிடப் பிரதிநிதி அப்துல் மகமூட் நிபுணர் குழு அறிக்கையினை வன்மையாகக் கண்டித்திருந்தார்.

மேற்குலகின் உளவு நிறுவனங்களின் அறிக்கையை பாதுகாப்புச் சபையில் முறியடிப்போமென சூளுரைத்தார்.

அறிக்கை கையளிக்கப்பட்டவுடன் சீனா, ரஷ்யாவின் உதவியுடன் இதனை எதிர்கொள்வோமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்து அப்துல் மகமூட்டிடமிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் போல் தெரிகிறது.

நிபுணர் குழுவின் அறிக்கையை பாதுகாப்புச் சபையில் சீனா, ரஷ்யாவின் உதவியுடன் வீட்டோ அதிகாரம் கொண்டு முறியடிக்கலாமென்று நம்பிக்கையோடு இருந்தது சூடானிய அரசு. அதற்கு பல அடிப்படையான வலுவான காரணங்கள் இருந்தன.

மிகப் பெரிய ஆயுத வழங்குனராகவும் பாரியவெளிநாட்டு முதலீட்டாளராகவும் அத்தோடு ஏறத்தாழ ஒரு பில்லியன் டொலர்கள் வருடாந்த வர்த்தகத்தை கொண்ட நாடாகவும் சீனா விளங்கியது.
ரஷ்யாவைப் பொறுத்தவரை சீனாவைப் போன்று சூடானின் எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடாகவும் அதேவேளை, ஆயுத விநியோகத்தராகவும் இருந்தது.

அத்தோடு 21 நவீன ""மிக் 29'' ரக போர் விமானங்களையும் சூடானிற்கு வழங்கியிருந்தது ரஷ்யா.

இத்தகைய ஆழமான வர்த்தக உறவினைப் பேணும் இவ்விரு நாடுகளும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிலிருந்து தன்னைக் காக்குமென மிகவும் நம்பிக்கையோடு காத்திருந்தார் சூடானிய அதிபர் ஒமர் அல் பசீர்.

முதன் முதலதாக சூடானிற்கு எதிராக பொருளாதார மற்றும் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டபோது சமாதானப் பேச்சுவõர்த்தைகளையும் தேசிய நல்லிணக்கத்தையும் இத் தடை விவகாரம் நலிவடையச் செய்து விடுமென வியாக்கியானமளித்தது ரஷ்யா.

இது போன்ற கரணங்களையே வல்லுனர் குழுவின் அறிக்கைக்கு எதிராக முன்வைக்கும் இலங்கை அரசு, தேசிய இனங்களுக்கிடையே உருவாகும் நல்லிணக்க முயற்சிகளையும் அபிவிருத்தி திட்டங்களையும் ஐ.நா. சபையானது சீர்குலைக்க முனைவதாகக் குற்றம் சுமத்துகின்றது.

இவை தவிர இறைமையுள்ள தேசத்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்கிற தமது நீண்ட கால கொள்கையின் அடிப்படையில் இலங்கை விவகாரத்தில் வெளியாரின் தலையீடு இருக்கக் கூடாதென்று சீனா வலியுறுத்துகிறது.

யுத்தகாலத்தில் பெருமளவிலான இராணுவ தளபாடங்களையும் போர் விமானங்களையும் முப்பரிமாண இராடர்களையும் கடனடிப்படையில் வழங்கும்போது, அச் செயற்பாடானது உள்நாட்டு விவகாரமாக சீனாவிற்குத் தென்படவில்லையா?

தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்த மாவோசே துங்கின் நிலைப்பாடு பற்றிய விடயங்களையும் அதிபர் கூ ஜிந்தாவோ மறந்துவிட்டாரா?
மறுபடியும் சூடான் விவகாரத்திற்கு வருவோம்.

2006 இல் சூடானிற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. ஆயினும் நட்பு நாடுகளாக கருதப்பட்ட சீனாவும் ரஷ்யாவும் வெட்டு வாக்கினை (ஙஉகூO) பயன்படுத்தாமல் ஒதுங்கிக் கொண்டு பசீரின் காலை வாரிவிட்டன.

அதனையடுத்து ஒரு கட்சி ஆட்சி, எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் தள்ளுதல், ஊடகங்களை ஒடுக்குதல், சர்வதேச தொண்டு நிறுவனங்களை நாட்டை விட்டு வெளியேற்றுதல் போன்ற சர்வாதிகார ஆட்சி முறையின் கொடூரமான பக்கங்களை கட்டவிழ்த்து விட்டார் அதிபர் பசீர்.

இவ்வாறான அடக்கு முறை வடிவங்களின் பல பரிமாணங்கள் ஏற்கனவே இலங்கை அரசியல் தளத்தில் பரவிக் கிடப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. இராஜதந்திரப்.... மோசடிகள் ஊடாக மறுபடியும் ஆட்சியிலமர்ந்த ஒமர் அல் பசீர் மீது 12 ஜூலை 2010 அன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றம் முன்வைத்த இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு எதிராக, அணிசேரா நாடுகளை தம் மக்கள் அணி சேர்க்க அதிபர் பசீர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

ஏப்ரல் 12 ஆம் திகதியன்று ஐ.நா. சபை செயலாளர் நாயகத்தால் தரூஸ்மான் குழுவினரின் அறிக்கை கையளிக்கப்பட்டவுடன் அணிசேரா நாடுகளின் ஆதரவினைத் திரட்டப் போவதாக இலங்கை ஆட்சியாளர் தெரிவித்த கருத்து நினைவிற்கு வருகிறது.

இவ்வாறு பல நிகழ்வுகள், இலங்கையின் சமகால அரசியல் நகர்வுகளோடு இணைந்து சென்றாலும் இவ்விரு தேசங்களின் கேந்திர அமைவிடமும் வல்லரசாளர்களின் புவிசார் நலன்களும் அவற்றிற்கிடையிலுள்ள முரண்பட்ட உறவுகளும் வேறுபட்டு இருப்பதை கவனிக்க வேண்டும்.

சீனா, ரஷ்யாவின் படைத்துறை மற்றும் பொருண்மிய ஆதிக்கம் சூடானில் அதிகரித்த அதேவேளை, தென் சூடான் விடுதலைப் போராட்டத்திற்கு சில வல்லரசுச் சக்திகள் திரைமறைவிலிருந்து ஆதரவு வழங்கின.

இலங்கையைப் பொறுத்தவரை, சகல வல்லரசாளர்களும் நாடு பிளவுபடுவதை கொள்கை அளவில் கூட ஏற்க மறுத்து விடுதலைப் போராட்ட அமைப்பிற்கு பயங்கரவாத முலாம்பூசி அரசிற்கு உதவி புரிந்தார்கள்.

இருப்பினும் ஆசியப் பிராந்தியத்தின் கடல் வழி தலைவாசலில் வீற்றிருக்கும், இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடமே பெரும் வல்லரசுகளின் அப்பிராந்தியத்திற்கான கொள்கை வகுப்பில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆகவே தற்போது தனி நாடு உருவாகுவதை விரும்பாத சகல உலக வல்லரசுச் சக்திகளும் நிபுணர் குழுவின் அறிக்கையூடாக எதைச் சாதிக்க விரும்பலாமென்கிற கேள்வியை முன்வைக்க முடியும்.

இதற்கு ஆதரவான கருத்துக்கள் மேற்குல அணிகளிலிருந்து வெளிவருவதைக் காணலாம். அறிக்கையை நிராகரிக்கும் கருத்துக்கள் மேற்குலக எதிர்ப்பு அணியிலிருந்து கிளம்புகின்றன.

சூடான் போன்று போர்க் குற்றவாளியாக அல்லது இனப்படுகொலை புரிந்த அரசாக மரபார்ந்த சர்வதேச சட்டங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டால் அதன் அடுத்த கட்ட நகர்வாக இனப்படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்திற்கு பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொண்டு அதற்கான கருத்தறியும் வாக்கெடுப்பொன்றினை (கீஞுஞூஞுணூஞுணஞீதட்) நிகழ்த்த முன்வருமா?

மறுதலையாக பிரிவினை என்பது தத்தமது நாடுகளின் பிராந்திய மற்றும் பூகோள சந்தை நலன்களுக்கு உகந்த விடயமல்ல என்று கருதும் பட்சத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றினூடாக ஐ.நா. சபையின் கண்காணிப்பில் அரசியல் தீர்வொன்றினை அமுல்படுத்த முயற்சிக்கலாம்.

ஆனாலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட மனித உரிமை மீறல்கள், அதற்கான சான்றுகள் நிரூபிக்கக் கூடிய வகையில் இருப்பதால் இதனை சுலபமாக ஓரங்கட்டி விட முடியாத தடுமாற்றத்தில் உலக நாடுகள் இருக்கின்றன.

ஆட்சி அதிகாரத்தை இறுகப் பற்றிப் பிடிக்கும் வகையில் பெரும்பான்மையின மக்களை, ஓரணியில் திரட்டும் அரசு, வெளியாரின் அழுத்தங்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சகல வாசல் கதவுகளையும் தட்ட ஆரம்பிததுள்ளது.

இதில் இன்னொரு வகையான ஆபத்தையும் அரசு எதிர்கொள்ளலாம்.

போர்க் குற்றச்சாட்டுக்கள் கழுத்தை நெரிக்கும்போது பாதுகாப்புத் துறையிலுள்ள உயர்மட்ட படைத்துறை அதிகாரிகளுக்கிடையே பதற்ற நிலை உருவாகும் சாத்தியப்பாடுகளும் உண்டு.

அவர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டுமாயின் தானொரு பலமான நிலையில் பெரும்பாலான சர்வதேச நாடுகளின் ஆதரவோடு இருப்பதாக காட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும்.

ஆதலால் ஐ.நா. சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை,உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துமென உறுதியாக நம்பலாம்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» சவுதியில் இலங்கை பணிப்பெண் தற்கொலை
» ஹில்டன் ஹோட்டலை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum